Wednesday, November 8, 2023

[16 ] நல்லதையே நினைப்பாயாக.

 நல்லதையே நினைப்பாயாக.


ஒருவன் அடர்ந்த காட்டின் வழியே பயணம் செய்துக் கொண்டிருந்தான். கற்கள் முட்கள் ஆறுகள் என பெரும்பெரும் இடர்கள் வந்தாலும் துணிந்து அவன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே மிருகங்களின் ஓசையும் கேட்கும். எனினும் அவனும் பயந்துவிடவில்லை. இப்படியாக பகல் பனிரெண்டு மணியளவில் மிகவும் களைத்துப்போன அவன் ஒரு மாபெரும் மரத்தின் அடிவேரில் அமர்ந்தான்.



அவனிடம் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. உணவும் கிடையாது. போட்டிருந்த ஆடையும் வேர்வையினாலும் தூசிகளினாலும் மிகவும் அழுக்காக இருந்தது. உடலெங்கும் வியர்வை வழிந்து கசகசத்தது. “ஐய்யோ நான் எப்படி இந்த காட்டை கடப்பேன், பசி வேறு உயிர் போகிறதே, இப்போது மட்டும் சாப்பிடுவதற்கு ஏதாவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே”, என்று நினைத்தான்.



அவன் அமர்ந்திருந்தது நினைத்தையெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் எனும் கற்பக மரம். எனவே தங்கத்தட்டில் அறுசுவை உணவோடு தங்கக்குடுவையில் குடிக்க நீரும் அவன் முன் தோன்றியது.



 எதையும் யோசிக்காமல் அவன் உணவை தின்று முடித்தான். உண்டதும் நீரை வயிறு முட்டக்குடித்து விட்டதும் தூக்கம் சொக்க வைத்தது. “ஆஹா இப்போது கட்டிலும் பஞ்சணையும் நல்ல காற்றும் அடித்தால் நன்றாக இருக்குமே”, என்று அவன் நினைத்து முடிப்பதற்குள், அங்கே பஞ்சணையோடு கட்டிலும் தோன்றி விசிறி விடுவதற்கு அழகிய மங்கையரும் தோன்றினர். இந்த முறையும் அவன் யோசிக்கவேயில்லை. பஞ்சணையில் ஏறி படுத்து தூங்கி விட்டான்.


பிறகு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்தவன் குளிப்பதற்கு ஒரு அழகிய குளம் வேண்டுமே என்று நினைப்பதற்குள் அங்கே அழகிய குளம் உண்டானது. சட்டென்று அதில் குளித்து முடித்தவுடன் பட்டாடை வேண்டுமே என்று கேட்க பட்டாடையும் உண்டாயின.



அதை போட்டுக்கொண்டு யோசித்தான். “என்ன நாம் நினைப்பது எல்லாமுமே நடக்கிறததே? இப்போது புலி ஒன்று இங்கே தோன்றி நம்மை அடித்து விழுங்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் நடந்து விடுமோ?” என்று அவன் நினைப்பதற்குள் பசித்த புலியொன்று அங்கே தோன்றி அவனை அடித்து விழுங்கி விட்டது.



போதனை: எப்போதுமே நல்லதையே நினைக்க வேண்டும். நடப்பது யாவும் நல்லதற்கே என்று நினைத்து நம் காரியங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தால் பிற்பாடு நல்லதே விளையும்.


No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...