Friday, November 3, 2023

[ 15 ] எமனின் கயிறு....

 எமனின் கயிறு

உலகப்புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் கைவைக்காத சிலைகளே இல்லை என்று பேர் பெற்றிருந்தான். ஏதேனும் தத்ரூபமாக சிலை இருந்தால், அதை செய்தவன் இவன் தான் என்று கூறும்படி அவனுடைய புகழானது எங்கெங்கும் பரவியிருந்தது, தேவர்களும் கின்னர்களும் கிம்புருடர்களும் இராட்ஸர்களும் இவனுடைய கைத்திறனை வெகுவாக போற்றி வந்தனர் என்றால் அவனுடைய திறமை எத்தளவுக்கு இருக்கும் என யூகம் செய்து கொள்ளலாம்.


இப்படியாக பேரும் புகழும் படைத்த அவனுக்கு இயல்பாகவே இயற்  கையாகவே திமிரும் அகங்காரமும் இருந்தது. மற்றவர்களின் படைப்புகளை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 


ஆனாலும் மனிதன் எவ்வளவு நல்லவனாக திறமைசாலியாக இருந்தாலும் அவன் உடலுக்கு என்று ஒரு இறுதிக்காலம் உண்டல்லவா? அந்த சிற்பிக்கும் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தச்செய்தியை அறிந்திருந்த யமலோகத்தை சேர்ந்தவர்கள் சிற்பிக்கு தெரியப்படுத்தி விட்டனர். சிற்பிக்கோ இவ்வுலகத்தைவிட்டு போக மனமில்லை. அதனால் யமனையே ஏமாற்றிவிட தீர்மானித்து விட்டான்.


அதனால் தன்னைப்போலவே தத்ரூபமாக ஆறு சிலைகளை செய்தான். யமன் வரும்நாளன்று அந்த சிலைகளை வரிசையாக படுக்கை வாக்கில் கிடத்திவிட்டு நடுவில் ஏழாவது சிலையாக தானும் கிடந்தான்.


பாசக்கயிற்றோடு எமனும் வந்தான். ஆனால் சிற்பியோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர்கள் அங்கே கிடப்பதைக்கண்டு குழம்பிபோய் விட்டான். நேரமோ நெருங்கிக்கொண்டே இருந்தது. அவன் ஒரேஒருமுறை மட்டுமே தன்னுடைய பாசக்கயிற்றை வீச வேண்டும். தவறிவிட்டால் பிறகு மீண்டும் அவன் அதை வீசமுடியாது. இது சிற்பிக்கும் தெரியும்!


உடனே எமன், “ஆஹா என்ன அற்புதமான படைப்புகள், அவற்றை செய்தவன் கலையின் உச்சத்தையும் தொடுகிறவனாக இருப்பான், என்னே ஆண்டவனின் படைப்பு”, என்று சொல்லிவிட்டு படுத்து கிடந்திருந்த ஏழு சிலைகளின் முகங்களையும் கூர்ந்து கவனித்தான்.


அங்கே இருந்த சிற்பியானவன், “ஆஹா நம்முடைய படைப்பை எமனே போற்றுகிறான், ஆமாம் உலகிலேயே நான் தான் தலைச்சிறந்த சிற்பி” என்று நினைத்து புளகாங்கிதமடைந்தான். அந்த தற்பெருமை மனதில் இருந்து வாயினில் புன்னகையாக மலர்ந்தது. இதைக்கண்டுகொண்ட யமன் தன் பாசக்கயிற்றை சிற்பியின் கழுத்தினில் வீசி உயிரை எடுத்துக் கொண்டான்.


போதனை. எப்போதுமே அகங்காரமும் தற்பெருமையும் கூடாது. அவை உடனிருந்தே கொல்லும். 


No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...