Friday, October 27, 2023

[ 14 ] மரபணு

 

மரபணு.

 

”அம்மா அம்மா”, என்று முந்தானையை பிடித்து இழுத்தான் லதாவுடைய பத்து வயதான மகன் இளங்கோவன். “என்ன?” என்று இட்லிக்கு மாவரைத்தப்படி லதா கேட்டாள். ஐய்யோ நாளை பரீட்சை தொடங்குகிறது, இன்னும் நான் தயாராகவில்லையே, என்று மனதுக்குள் குமைந்து கொண்டாள். அவள் எம்.எஸ்.சி உயிரியல் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவள், சடுதியில் புகழ்பெற்றிருந்த தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பத்தாம் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுக்கிறாள். இப்போது இளங்கோவனின் புன்சிரித்த முகமும் பிஞ்சு உதடுகளிலிருந்த புறப்பட்ட வார்த்தைகளும் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

 

“அம்மாவுக்கு என்ன இளங்கோ” என்று இட்லி மாவை கைத்துண்டால் துடைத்தப்படி வினவினாள்.

 

“இல்லை, அப்பா வந்து நான் பாட்டியை உரித்து வைத்தப்படி இருக்கிறேனாம், நான் பாட்டி சொல்கிற வார்த்தைகளையும் சைகைகளையும் அப்படியே செய்கிறேனாம், எனவே நான் பாட்டியின் மறு அம்சமாம், அதாவது செத்துப்போன பாட்டி என் உருவில் பிறந்திருக்கிறளாம், அவர் சொல்வது உண்மையா?”

 

லதா தன்னுடைய மாமியாரை பற்றி யோசித்தாள். அவர் சற்று பிடிவாதமாக இருந்தாலும் அடிப்படையில் நல்ல மாமியார், தனக்கு மகள் இருந்தால் எப்படி பார்த்துக் கொள்வாரோ அப்படியே தன்னையும் பார்த்துக் கொண்டார், ஆமாம், அவளுடைய உருவமும் குணங்களும் நடையும் அப்படியே இளங்கோவனிடம் இருக்கிறது, “ஆமாம் அப்பா சொன்னது சரிதான், நீ அப்படியே பாட்டியின் ஜாடைதான்”.

 

 “சரி சரி. அப்போது அவருடைய குணநலன்களும் என்னிடமிருக்கிறது சரிதானே”

 

“ஆமாம், அதிலென்ன ஐயம்?”

 

 “அப்போது பாட்டி மறுபிறவி எடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா?”

 

லதா யோசித்தாள், “ம்ம்ம், அப்படியும் ஒருவகையில் கூறலாம்தான்”

 

 “நீதான் உயிரியல் படித்தவராயிற்றே, இன்னும் விளக்கமாக சொன்னால் ஆகாதோ?”

 

லதா சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். இளங்கோவனை தன்னருகினில் அமர்த்திக்கொண்டு பேசத்தொடங்கினாள்.

 

“ இளங்கோவன், நமக்கு எல்லோருக்குமே தலை கண் காது மூக்கு இதயம் நுரையீரல் சிறுநீரகங்கள் முதலானவை உள்ளன அல்லவா? இந்த உறுப்புகள் யாவுமே அதாவது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரைக்கும் ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை, அதாவது இந்த செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்ததுவே நம் கண்கள், காதுகள் முதலானவை”

 

இளங்கோவன் கண்களை அகலவிரித்து கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“இந்த செல்கள் யாவுமே கணக்கு வைத்தாற்போல் அழிவதும் மறுபடியும் புது  செல்கள் உருவாவதும் அன்றாடம்  நிகழ்கின்றன. ஆயிரக்கணக்கான கோடி செல்கள் ஒவ்வொன்றிலும் டி என் ஏ என்ற மரபணு உள்ளது. ஏணிபோன்ற வடிவமைப்பில் உள்ள இதுவே நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்திட்டங்கள் மற்றும் நாம் எப்படியாக  இருக்கிறோம், நம்முடைய உடல் அமைப்புகள் யாவற்றின் சிக்கலான வரைபடங்கள் இந்த மரபணுக்களில் தான் உள்ளன. புரிகிறதா?”

 

“ஓஓ நன்றாக புரிகிறது”

 

“கைவிரல் ரேகைபோல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பிரத்யேகமான அமைப்புகள் உள்ளன. இந்த ஒவ்வொரு மரபணுவிலும்தான் நம்முடைய எண்ணங்கள் மற்றும் ஆழ்மனங்கள் உள்ளன”

 

“ஆஹா மனம் என்பது இங்கேதான் உள்ளதா?”

 

“ஆமாம். சரியாக சொல்லப்போனால் மனம் அல்ல, மாறாக மனங்கள். ஆக இந்த கோடிக்கணக்கான செல்கள் அவற்றின் உள்ளே மூன்று மீட்டர் அளவிலிருக்கும் மரபணுக்கள், இவற்றின் உள்ளே தான் நம்முடைய வாழ்க்கை இலட்சியங்கள், நாம் பணக்காரர் ஆவதா? ஏழ்மையிலே வருந்தி கிடப்பதா? நம்முடைய தாத்தா பாட்டி மற்றும் அவர்களின் முன்னோர் நினைத்த நினைப்புகள் யாவுமே இவற்றில் அழுத்தமாக பதிந்துக்கிடக்கின்றன. என்ன புரிகிறதா?”

 

“புரிகிறது, புரிந்தது”.

 

” நீ கேட்டாயே மறுபிறவி என்பது உள்ளதா என்று? ஒருவகையில் அது உள்ளது என்பேன். நம்முடைய முன்னோர்களின் ஆசைகள் எண்ணங்கள் முதலானவற்றை சுமந்து கொண்டு ஒருவன் பிறக்கிறான் என்றால் அது மறுபிறவிதானே? ஆனால் நம்முடைய வாழ்க்கை மேம்படுவதற்கு அவர்களின் எண்ணங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது அல்லவா?”

 

“ அப்போது அவற்றை கண்டுபிடித்து தேவையில்லாதவற்றை களைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் அம்மா?”

 

“இன்னொருநாள் சொல்கிறேன்”.

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...